கருவுற்ற நாள்முதலாய்..
கண்அயராது
கருவறையிலெனைச்
சுமந்'தாயே'! ! ..
பல நூறு நாட்கள்
பத்தியமிருந்து
பத்திரமாய்
பிரசவித்'தாயே '! !
அன்போடு
ஆரோக்கியத்தையும்..
இதயத்தில்
இன்பம் நிரப்பி..
பாசத்தை மழையாய்
பொழிந்து..
குழந்தைப் பருவம் முதல்
குமரியாகும் வரை
குறையொன்றும் வைக்காது என் மனதை
குளிர்வித்'தாயே '! !
பணிப் பளுவிலும்..
பத்திரமாய்
பார்த்துக் கொண்டாய்..
தனிமையில்
தவித்திடாதிருக்க
தீனி, உணவை
தினம்தோறும்
குறிப்பெழுதி
உண்ண வைத்'தாயே '! !
தம்பியவனை
தங்கமாய்
கவனித்துக்
கொண்டேன்
என புளங்காகிதம்
கொண்டு ஒரு காகிதம்
கையிலெடுத்து.
எனை படைத்த நீரே..
எனை நாயகியாக்கி..
சிறு கதை படைத்து
கௌரவித்'தாயே '! ! .
வேற்றுமை பாராது..
சமயபுரம்
சபரிமலை என
கடவுள் ஒன்றென..
சமமுடன் சேவித்'தாயே '! !
இறைவனின் படைப்பில்
வேற்றுமை இல்லையென..
இன்முகத்துடன்
இயன்றரளவு
இல்லாதவர்க்கு உதவி மகிழ்ந் 'தாயே '! ! ! !
அடைத்து வைத்தும்
அடக்கி வைத்தும்
அடிமைப் படுத்தாது..
ஆரம்பம் முதலே
ஆணுக்கிணையாய்
ஆளுமைத் திறனோடு
ஆளாக்கி அரவணைத்'தாயே '! !
அன்பளிப்பாய்
ஆசைப் பட்ட பொருட்கள்..
ஆயத்த ஆடைகள் என நான்
தேடுவதற்கு முன்பே
தேவையானவற்றை வாங்கித் தந்'தாயே'! !
எடுப்பார் கைப்பிள்ளையாகாது..
நான் எடுக்கும் முடிவுகளில்
நியாயமே மிளிருமென்று
நம்பிக்கை கொண்டு..
உளமாரப் பாராட்டி
உற்சாகப் படுத்தி..
கணக்கு பாராது.. கல்வி தந்து
சுய சிந்தனை கொள்ள செய்'தாயே'! !
கவலை தெரியாது
கண்ணும் கருத்துமாய் வளர்த்'தாயே'..
விரும்பியவரையே
வாழ்க்கை துணையாக்கிட..
துறக்க துணிந்தேன்
சாதி ஒன்றையே...
இத்தரணியிலே..
இரும்பு
இதயம் எவருக்குண்டு
இழப்பதற்கு தாயன்பை ? ?
ஒவ்வொரு இரவும்
கண் மூடுகையில்
கலங்குகிறது என் நெஞ்சம்..
உன் குரல் கேட்பேனோ..
உன் மடி சாய்வேனோ..நம்
அன்றாட நிகழ்வுகளை
அன்போடு பகிர்ந்து கொள்வேனோ என..
ஏங்கும்
என் மனவலியை
புரிந்து கொள்வாயோ?
நிரந்தரமாய் வரும் மனிதர்
எவருமில்லை என
கருத்தை
விதைத்து எனை
வளர்த்தாலும்...
உற்றத் தோழியாய்
தினமும்
கதைத்துக் கொள்ள..
நாடுகிறதென்
மனமுன்னையே..
மறைவில் நின்றாவதுன்னை..
தரிசிக்க மாட்டோமா என
தேடுகிறதே என் கண்கள்
நித்தம் ஏங்கிய படி...
பார்த்து ஆறுதல் கொள்ள..
பகல்பொழுதில் நம் வீட்டை
கடந்து செல்கையில்
தற்செயலாய்..
தந்தையை
கண்டவுடன்..
சந்தோசக் கடலில் நீராடினேன்
பசுவினை கண்ட கன்று போல்.! !
மானிடர் காதலில்
மயங்கி விழும்
மணித்துளியை
கணிப்பவர் எவருமுண்டோ? ?
தெரிந்திருந்தால் அந்நாளை
தூங்கியே
கழித்திருப்பேன்..
இன்றும்
உன்மடியில்
நிம்மதியாய்
களித்திருப்பேன்..
மன்னிப்பு கோருகிறேன்..
மனமுருகி வேண்டுகிறேன்.
தனிமையில்
தவிக்க விட்டு..
தண்டித்தது போதுமெனை..
தாமதமேன்?
தரவில்லையா
தெய்வம் இன்னும்..எனை
மன்னித்து ஏற்கும்
மனப்பக்குவத்தை?
உன் உணர்வுகளை காயப் படுத்திய
உன் மகளின் செயலினை மன்னிப்பாயோ?
சாஸ்திர
சம்பிரதாயங்கள்
உறவுகளை வலுப் படுத்தி
மகிழ்ச்சியை பெருக்கத் தானே?
வெட்டிவிட்டு
வேடிக்கை பார்க்க அல்லவே?
இரட்டைச் சுமையை
உன் மகள் சுமக்கிறேன்..
உன் பேரக் குழந்தையை மடியிலும்..
உன் நீங்கா நினைவுகளை மனதிலும்..
ஒரு சுமையை
இறக்கிவிடுவேன்
ஐயமின்றி
ஐந்து மாதங்களில்.. நாம் இருவர்
ஐக்கியம் ஆகிவிடுவோம் என்ற பெருநம்பிக்கையோடு! !
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem