உப்புக் கரித்து வழிந்த
உறவுகளின் கண்ணீர்த் துளிகளும்
உலர்ந்து விட்டன!
மரண அறிவிப்பு செய்த
காண்டாமணியின் ஒலியும்
கரைந்து விட்டது!
துக்கித்த உறவுகளும்
மெல்ல மெல்ல ஆளுக்கொரு பக்கம்
கலைந்து விட்டது!
பிரிவு தந்த வலியும்
மெது மெதுவாகக்
குறைந்து கொண்டிருக்கிறது!
உணர்வற்ற பிரேதமும்
பளிங்கு கல்லறையின் அடியில்
அதன் ஆளுமையையும்,
பெருமையையும்
இழந்து இருளில் தன்னைக்
கரைத்துக் கொண்டிருக்கிறது!
ஆதவனின் கிரணங்கள்
அவர் மேல் பெருமையுடன் இனித்
தழுவப் போவதில்லை!
ஒளி மிகு நட்சத்திரங்களும்
அவர் வரவிற்காகக் கண்
சிமிட்டப் போவதுமில்லை!
மெல்லிய பூங்காற்று
தென்றலின் தீண்டலை அவர்க்குத்
தரப் போவதுமில்லை!
வானத்தின் மெல்லிய மழைத் தூரல்
ஒரு போதும் அவ்ர் மேனி தீண்டி
நனைக்கப் போவதுமில்லை!
என்றாவது ஒருநாள் திடீரென்று
நினைத்துக் கொண்ட நண்பன்
கல்லறையை எட்டிப் பார்க்கலாம்!
உறவினர்கள் எப்பொழுதாவது
அருகில் வந்து குழுவாக சப்தித்து
வழிபாடும் செய்யலாம்!
அழகாக வடிவமைக்கப்பட்ட
மலர் வளையம் பாந்தமாக
கல்லறைக்குச் சூட்டலாம்!
மதச்சடங்குகளும்
ஒருசில சந்தர்ப்பங்களில் செய்து
உன்னைக் குளிர்விக்கலாம்!
துக்கிக்கவோ அழுவதற்கோ
யாருமின்றி சடலம் கல்லறையில்
அழுக விட்டு,
உற்றார்கள் உலக சுகம் தேடி
உல்லாசமாய் பேசிச் சிரித்தபடி
பிரிந்து செல்லலாம்!
களிமண்ணாக குளிர்ந்து கூழாகி
கரையான்களுக்கும் புழுக்களுக்கும்
விருந்தாகி,
வாழ்வில் பெற்ற
பேரெல்லாம் வீணாக,
புகழ், பெருமையெல்லாம் விட்டகல,
நாம் செல்வத்தைத் தேடி
வாழ்நாளில் எப்படியெல்லாம்
வீணாக ஓடினோம்!
பதவி மோகமும், பணபலமும்
பெரிதென எண்ணி ஓடித்தேடி
அடைந்த இடம் எது!
இன்னும் ஆசை அகலாமல்
ஓடித்தேடி அலைகிறோமே
எதற்காக!
வல்லமை நாடி ஓடிய ஓட்டமும்
புகழைத் தேடும் தாகமும் ஓர் புள்ளியில்
முற்றுப் பெறுகிறது!
சேர்ந்திருக்கும் செல்வம்
பளபளப்புடனும் பகட்டுடனும் சிலகாலம்
இருந்திருந்து மறைகிறது!
மானுடராய்ப் பிறந்தோரெல்லாம் ஓர்நாள்
மரணித்து மண்ணும் சாம்பல் துகளுமாகி
ஏகாந்தத்தில் கலக்க வேண்டும்!
ஓ இறைவா! இவ்வுலக வாழ்வென்னும்
மாயையில் எங்களை உழல விடாதே,
பெருஞ்செல்வப் பேராசை அண்ட விடாதே!
Ref: The poem 'Dust unto dust' by Prof. Valsa George.