Tuesday, April 3, 2018

விடுதலையின் பதாகை Comments

Rating: 0.0

என் கிராமத்தின் தேகமெங்கும்
வர்க்கத்தின் இருள் கவிந்திருக்க
அச்சமூட்டும் துரோகியின் குறுவாளைப் போல
பிசிரின்றி
எரிந்துகொண்டிருக்கிறது இரவு
அன்று வானம் நீலமாயும்
நட்சத்திரங்கள் சீம்பாலைப் போலவும்
மின்னிக் கொண்டிருந்தன
மூங்கில் கூடையில் வெளிச்சம் வாரப்பட்ட
வீட்டின் முற்றத்தில்
நிர்வாணமாய்க் கிடத்தப்பட்டிருக்கிறேன்
கால்களும் கட்டப்பட்டிருக்கின்றன
தமையனைக் கூடச்சொல்லும் வக்கிரம்
இரவின் உச்சாடனமாய் ஒலிக்க
ஆதிக்கத்தின் கருந்திரவத்தைப் பருகியவர்கள்
என் யோனியில் பள்ளம் பறித்துப்
பருத்த கம்பொன்றை நிறுத்துகிறார்கள்
என் வலியின் ஓலத்தில்
அரங்கேறுகிறது ஒரு சாதிக்கூத்து
ஆடிக் களைத்தவர்களின் குறியிலிருந்து
வழிந்தோடிய வன்மத்தின் கால்வாயில்
வீசப்படுகிறது என் உடல்
செவிட்டுப் போர்வையிலிருந்தும்
குருட்டுத் தூக்கத்திலிருந்தும் விடுபடாத தேசத்தில்
சட்டையுரிக்கும் சர்ப்பத்தின் உக்கிரத்தோடு
மண்ணுக்குள் புதைகிறேன்
யோனியில் ஊன்றிய கம்பின் உச்சியில்
குருதியின் நிறத்தோடு பறக்கும்
எம் விடுதலையின் பதாகை.
...
Read full text

Sukirtharani
COMMENTS
Close
Error Success