அன்னையின் மாண்பு! !
தமிழாக்கத் தழுவல்: என் வி சுப்பராமன்
வீட்டிற்கு வீரன் பிணமாய்த் திரும்பினன்
வீட்டில் அன்னை புலம்பினள் இல்லை
புரண்டு மிரண்டு அழுதனள் இல்லை
மயக்கமுற்று வீழ்ந்தனள் இல்லை
வியந்த தாதியர் வியப்பொடு செப்பினர்
"அந்த அன்னையின் கண்ணீர் ஆறாக வேண்டும்
அல்லது அவளது உயிர் போக வேண்டும்".
அவனைப் புகழ்ந்து அனைவரும் பேசினர்
மெதுவாய்க் கூறினர் மென்மையாய்க் கூறினர்
அன்பிற்குகந்தவன் அவனன்றி வேறல்லர்
நட்பிற்கு இணையென்று வேறெவரில்லை
கண்ணியமான எதிரியும் இல்லை! எனினும்
எந்த வார்த்தையும் அவள் பகன்றாளில்லை
நொந்த உணர்வைக் காட்டவுமில்லை!
அந்தோ ஒருவள் அருகில் சென்றனள்
அவனது முகத்தின் திரையினை நீக்கினள்
அப்பொழுதும் அவள் அழுதாளில்லை
அப்படி இப்படித் திரும்பவும் இல்லை!
தொண்ணூறாண்டு செவிலியர் ஒருத்தி
மண்ணில் வீழ்ந்த மாபெரும் வீரனை
மகவாய்ப் பெற்ற அன்னையின் மடியில்
மெதுவாய்க் கிடத்தினள் மென்மைபொங்க!
அங்கே பாய்ந்தது கடலெனக் கண்ணீர்
"அன்பு மகனே! உனக்கென வாழ்வேன்"!
என்றது அந்த அன்னையின் நாவும்
அங்கே தெரிந்தது அவளின் மாண்பு!
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem